Wednesday, May 30, 2007

மறுபடியும்..

காலில்
கட்டிக் கொண்டிருக்கிற
இலங்கை
போர் சலங்கை ;
அதன் ஆட்டத்தில்
அதிர்கின்றன...
தமிழர் வாழும்
திக்குகள் ;
புன்னகப்பரோ புத்த
பிக்குகள்?
**
போற்றுகிறார்கள்
புத்தன் பல்லை;
புறக்கணிக்கிறார்கள்
புத்தன் சொல்லை;
அன்னணம் இல்லையேல்
ஆகுமா புத்த பூமி
யுத்த பூமி?
**
இந்தியாவில்
இருந்தவரையில்
புத்தன்
போதிமரத் தடியில்;
இலங்கைக்கு
இடம் பெயர்ந்த பின்
புத்தன்
சாதிமரத் தடியில்!
**
சிங்களச் சாதி;
தமிழச் சாதி;
பகுத்துப் பார்க்கிற
பவுத்தம் ;
அது போலுளதோ
வேறு அபத்தம்?
**
ஆதி நாளில்
அந்த நிலம்...
தமிழன் வியர்வையில்
தழைத்ததை விளக்கும்
தேயிலை; ஆனால் அதற்கு
வாயிலை!
**
அண்மையில்
அகதிகளாய்ச் சிலர்...
கலம் ஏறி வந்தனர்
கண்ணீர்க் கடலோடு;
தரை காணா போயினர்
தண்ணீர்க் கடலோடு!
**
பயணித்தபடகு...
கவிழ்ந்து
கடலெங்கும் சவம்;
அது சவமல்ல; அந்த
சித்தார்த்தன் தவம்!
**நன்றி:கவிஞர் வாலி ,குமுதம்.

தபூ சங்கர் கவிதைகள்..2

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது? என்று!"
**
வீட்டிற்கு
ஒரு மரம்
வளர்ப்பார்கள்!
உங்கள்
வீட்டில் மட்டும்
ஏன்
ஒரு மயில்
வளர்க்கிறார்கள்?
**
கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில்
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.
**
காற்றோடு
விளையாடிக் கொண்டிருந்த உன்
சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்!
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.
**
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பிச் சாப்பிடும்போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகிவிடுகிறது..
**
என்னுடையது
என்று நினைத்துத்தான்
இதுவரையில்
வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை
உன்னைப் பார்த்ததுமே
பழக்க்க்ப்பட்டவர்
பின்னால் ஓடும்
நாய்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு!
**
வருடத்துக்கு ஒரு முறை
சீதா கல்யாணம்
நடப்பது மாதிரி
உன்னையும் நான்
வருடம் ஒரு முறை
திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
**
நீ
யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
**
எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு
போதும்!
**
முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்
பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.
**

கால ராட்சசன்!

யுகம்
அவன் நகம்!
உள்மூச்சு
ஜனனம்!
வெளிமூச்சு
மரணம்!

நட்சத்திரங்கள்
அவன் துடைத்தெறிந்த
தூசுத்துகள்கள்!

சந்திர சூரியர்கள்
அவன் காலிடை
மிதிபடுகல்லிடைக்
கிளர்ந்த சிறுபொறிகள்!

வியர்வைத் தாரையின்
ஒரு துளி கடல்!
அதில் விளைந்த
கிருமிகள்,
ஜீவராசிகள்!

மழிக்கையில் உதிர்ந்த
மருக்கள் மலைகள்!
கட்டைவிரல்
நகம் இடறச்
சிதறிப்போன சிற்றில்கள்,
சாம்ராஜ்ஜியங்கள்!

போர்கள்
தெருக்கூத்து!
கொட்டாவி
பூகம்பம்!
பெருமூச்சு
புயல்!

மனிதர்கள்!
மைக்ரோ வினாடிகளில்
அவன்
படைத்துப் படைத்து
உடைக்கும் குமிழ்கள்!

பூகோளம்
சரித்திரம்!
தத்துவம்
இலக்கியம்!
கலை கலாசாரமெல்லாம்
அரைகுறையாய் எழுதி
அவன்
எச்சில் துப்பியழிக்கும்
சிலேட்டுச் சித்திரங்கள்!

விஞ்ஞானம்
அவன் ஒழுகவிட்ட
ஒரு சொட்டறிவு!
பூமியாகப்பட்டது
அவன் கணக்கில்
சில நாட்கள்
பறக்கவிட்ட பலூன்!

இஃதிவ்வாறிருக்க -காலத்தை
வென்றதுகள் என்று
தருக்கிச்
சிலதுகள் திரியுதுகள்
சிகையலங்காரப் பொழுதிலவன்
தலையினிழிந்த மயிரனையதுகள்.


(மயிரனையது-மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார். )
**நன்றி:வைரமுத்து, கொஞ்சம் தேனீர் நிறைய வானம்.

மெழுகுவத்தி!

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு
சிதைவதை எண்ணியே
அந்தத் தாய் அழுகிறாள்

மேனியில்
தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ
நரம்பிலே
தீ விழுந்து
மேனி எரிகிறது

மரணத்தை வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே
விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம்
முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு நீர்ப்பயிர்
வளர்க்கிறது

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத்
தீ நாக்கு
எத்தனை அழகாய்
உச்சரிக்கின்றது?

எந்த துயரத்தை
எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது
இந்தப் பேனா?
கண்டு சொல்லுங்கள்!

கண்ணெதிரே
நடப்பதென்ன
கொலையா?
தற்கொலையா?

எப்பொழுதுமே
இதற்குத்
தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?

இந்தத்தீக்குளிப்பின்
முடிவில்
மரணத்தின் கற்பு
ருசுவாகிறது

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள்
முட்டி மூழ்கும்

அங்கே வடிவது
கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?
ஓ!
கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகுதான்
உயிர் வருகிறது

மனிதனைப் போலவே
இந்த அஃறிணையும்
நான்
அதிகம் நேசிப்பேன்!
எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்
என் இரத்த நெய்யில்
இது
நம்பிக்கைச் சுடரேற்றும்!

வாருங்கள் மனிதர்களே!
மரணத்திற்கும் சேர்த்து
நாம்
மெளன அஞ்சலி
செலுத்துவோம்!
அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.
**நன்றி:வைரமுத்து,திருத்தி எழுதிய தீர்ப்புகள்.

Tuesday, May 29, 2007

நீ!

நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!
**
உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
மின்னஞ்சல்கள் அவமதிப்பு,
குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!
**
உன் நினைவுகளே
வாழ்க்கை
என்றான பிறகு
நீ
தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?
**
குட்டி போடும்
என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..
**
செடி கொடி மரத்தில்
மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!
**
என்ன எழுதினாலும்,
உன்னுடைய
“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!
**
யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது
என்றேன்
தோழி, நீ அழைக்கும்
தொலைபேசி மணி
ஓசை கேட்கும் வரை..
**
என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...
**
அத்தி பூத்தது...
உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!
**
உன்னிடம் பேச
எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
**
என்னை கொல்ல
வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
**
மன்னித்து விடு!
நான் உன்னை
மறக்க
மறந்துவிட்டேன்….
**
செடியில் பூத்துக்கொண்டே
உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??
**
உபயம்: இணையவலை

Monday, May 28, 2007

திமிரழகி!

மாலையில் நண்பனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.
என்னுடன் படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே அதிசயமாக வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத்தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச அழகி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்... சில நேரம் யார் நீ? என்பது போல் பார்த்துப் போவாய்.
இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக, உன்னுடன் வந்தவளை என் தோழி என்றும், உன்னை என் க்ளாஸ்மேட் என்றும் சொன்னேன். க்ளாஸ்மேட் என்று சொல்லும்போது உன் முகத்தில் ஒரு கனல் எழுந்து அடங்கியதையும் கவனித்தேன். உடனே கிளம்பறோம் என்று உலாவைத் தொடர்ந்தீர்கள்.

அடுத்த நாள் கல்லூரியில் உனக்கு உற்சாகமாக ஒரு ஹலோ சொன்னேன்.
ஆனால், நீயோ கவனிக்காமல் காற்றாக போனாய்.
"அவ உன் மேல் கோபமா இருக்கா! "என்றாள் எனக்கும் உனக்குமான தோழி.
"ஏன்?" என்றேன் வியப்பு காட்டாமல்.
"நேத்தைய கோபம்! "என்றாள்.
அதானே உண்மை! தோழியைத்தான் தோழினு சொல்ல முடியும். மனசுக்குள்ள ஆசை ஆசையா விரும்பற பெண்ணை, தோழினு சொல்லி நட்பைக் கேவலப்படுத்த எனக்குத் தெரியாது என்றேன்.
அதிர்ந்துபோனாய் நீ! உன் முகத்தில் கோபம் சலங்கை கட்டி சதிராட ஆரம்பித்தது. ஆனால், அதைத் துளியும் வெளிக் காட்டாமல், வேகமாக என் பக்கம் திரும்பினாய்... நீங்க நெனைச்சாப் போதுமா... நாங்க நெனைக்க வேண்டாமா? வெடுக்கெனச் சொல்லி விட்டு வேக வேகமாய், புயல் மாதிரி போய் விட்டாய்.
நானோ ஏமாற்றத்துடன் அப்போதே கல்லூரியி லிருந்து வெளியேறினேன்.

அடுத்த இரண்டு நாட்களுக்குக் கல்லூரிப் பக்கமே எட்டிப் பார்க்க வில்லை.
ஆனாலும் மாலைகளில் கடற்கரைக்குப் போய்,
எப்போதும் நான் அமர்ந்திருக்கும் இடமருகில் மறைந்து நின்று, நீ வருகிறாயா... வந்து என்னைத் தேடுகிறாயா என்று பார்ப்பேன்.
நீயும் வந்தாய். வந்து என்னைத் தேடிவிட்டு, ஏதோ முணுமுணுத்தபடி திரும்பிப் போனாய். "டேய் மகனே... சத்தியமா இது காதல்தான்! "
என்று என் காதில் கிசுகிசுத்தன நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்.
மூன்றாம் நாள் மாலையில், இன்னொரு நண்பனுடன் கடற்கரையில், என் இடத்தில் அமர்ந்திருந்தேன். தோழியுடன் வந்த உன் கண்களில் மின்னல். அது மின்னல் என்பதனால் அடுத்த கணமே காணாமல் போனது.
எங்கே காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? என்றாள் உன் தோழி... ஸாரி, என் தோழி. லவ் ஃபெயிலியர்! என்றேன் கூசாமல்.
உன் முகத்தில் ஒரு எகத்தாளப் புன்னகை எழுந்து அடங்கியது அவசரமாக.
"சரி, அதை விடு " என்று நானே பேச்சை மாற்றி, என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு, உங்கள் இருவரையும் என் தோழிகள் என்று சொல்லி, பிளேட்டைத் திருப்பிப் போட்டேன்.
அதுவரை அமைதியாக இருந்த நீ இப்ப மட்டும் நட்பைக் கேவலப்படுத்தலாமா? என்று நமக்குப் புரிகிற பாஷையில் வெடித்தாய்.
"இதில் என்ன கேவலம்? உண்மையைத்தானே சொன் னேன்! "என்றேன்.
"அப்போ... நீ என்னைக் காதலிக்கலியா? "

ஆவேசம் கொண்ட அம்பிகை யான நீ,
"அய்யோ... நீ சரியான மக்குப் பிளாஸ்திரிடா!
அன்னிக்கு நீ என்னை கிளாஸ்மேட்னு சொன்னதுக்கு,
நான் கோவிச்சுக்கிட்டப்பவே உனக்குப் புரிஞ்சிருக்க வேண்டாமா? "
என்றாய் படபடக்கும் பட்டாம்பூச்சியாய்.
"அப்படி வா வழிக்கு!" என்றேன்.
"மண்ணாங்கட்டி... தனியா கூட்டிட்டுப் போயி, ஒரு ரோஜாப்பூ கொடுத்து, காதலை அழகா சொல்லத் தெரியாதா உனக்கு?" என்றாய் குறுகுறு பார்வையுடன்.
"ஓஹோ... மகாராணிக்கு இதுதான் பிரச்னையா? வாங்க மேடம் என்னோட! "என்று உன் கையைப் பிடித்து இழுத்துப்போய், ஒரு பூக்கடை முன் நிறுத்தி...

‘எல்லாப் பூவையும் குடுங்க!’ என்று பூக்காரம்மாவிடம் கேட்டு வாங்கி, அப்படியே பூக்கூடையை உன் முன் நீட்டி, ‘நான் உன்னைக் காதலிக் கிறேன்!’ என்றேன்.
வெள்ளமென வெட்கம் பாயச் சொன்னாய்...

"இந்த ராட்சஸிக்கு ஏத்த ராட்சஸன்டா நீ! "
**

உன்னை விட
தீயணைப்புத் துறை
எவ்வளவோ மேல்.
வீடு எரிந்தால்
அது அணைக்க வரும்.
ஆனால், நீயோ
என்னை வந்து
அணைத்துவிட்டு
எரியவிடுகிறாய்!
**
நிலவைச் சுற்றி வர

விஞ்ஞானிகள்
செயற்கைக் கோள்
அனுப்புவது மாதிரி
உன்னைச் சுற்றி வர
என்னை அனுப்பியிருக்கிறது
காதல்!
** நன்றி..தபூ சங்கர்

தபூ சங்கர் கவிதைகள்..

வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.
**
கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**
நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..
**
எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..
**
நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!
**
நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்
**
உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……
**
உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்
**

மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு
**
எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!
**
இதற்கு முன்
யாராவது
இப்படி உன்னைப்
பார்த்ததுண்டா?
எப்படி?
“ ஹய் பொம்மை ! “
என்று !
**
உன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.
**
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.
**
சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து
கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!
**
இவை இப்படித்தான் என்று
நான் நினைத்துக்கொண்டிருப்பவற்றை கூட
எவ்வளவு சுலபமாய் பொய்யாக்கிவிடுகிறாய்?
உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான்
எனகின்ற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற
ஒரு சின்ன புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே !
**
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !
**
ஒரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!
**
அழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..
**
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
**
என் வீடு
எனக்குப் பிடித்திருகிறது
எதிர் வீட்டில்
நீ இருப்பதால்!
**
உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!
**
நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.
**
என்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.
**
காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.
** தபூ சங்கர்