Monday, December 22, 2008

நீ..

விதியின் விளையாட்டில்
சில்லுகளாய்
சிதறிக்கிடந்த என்னைச்
சிறுக சேர்த்து சிற்பமாக்கிய
சிற்பி..

விழியிருந்தும்
வாழ்வின்வழியறியாமல்
விக்கித்து இருந்தவனை
விரல் கொடுத்தழைத்துச் செல்லும்,
என் வாழ்வின்
வழிக்காட்டி..

தோல்விகளில்
துவண்டிருந்த்த எனக்கு
சாய்ந்து அழ தோளும்
நிமிர்ந்து எழ தோழமையுமளித்த
உன்னத தோழி..

கோபத்தை கொண்டு மட்டுமே
காரியம் சாதிக்கமுடியும்
என்றெண்ணியிருந்த எனக்கு
அன்பினால் முடியாததேதுமில்லை
என்று அன்பினாலேயே
எனக்குணர்த்திய
என் தேவதை..

உன்னை நேசிக்க
ஆரம்பித்த பின்புதான்
என்னையே நான் நேசிக்கக்
கற்றுக்கொண்டேனடி!!
என்னையே எனக்குணர்த்திய
குட்டி பிசாசு..

சிணுங்கும்பொழுதும்
சிரிக்கும்பொழுதும்
உள்ளம் கொள்ளை கொள்ளும்
சிறுமியாகிறாய்..

கொஞ்சும் பொழுது
குழந்தையாகிறாய்..

பொய் கோபம் கொள்ளும் பொழுதும்
மெய் கோபத்தில் பேசினாலும்,
என் தவறுகளை மென்மையாக
சுட்டும் பொழுதும்
உற்றத்துணை நீதான் எனக்கென
உணர்த்திடும் செல்ல ராட்சஷி..

என்னவளே...
உடல் மறந்து பறக்கும்
உயிர் போலல்லாது..என்றென்றும்
உன்பின்னும் முன்னும்
அருகிலுமாய்
உடன்சுழலும் நிழலாய்
வர வரம் தருவாயா???