Monday, July 9, 2007

'அ'னா 'ஆ'வன்னா..

மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்(ஒரிஜினல்)
எட்டாம் வகுப்பில்
அறிவியல் எடுத்த
கே.எஸ்.கே வாத்தியார்
எங்களை முன்வைத்து
தமிழ்ப் பேரகராதிக்கு
இரண்டு பெயர்ச் சொற்களை
தானமாக கொடுத்திருந்தார்.

சாதுவான பையன்களென்றால்
'ஆரிய பவன்.'
சட்டாம்பிள்ளைகளுக்கு
'முனியான்டி விலாஸ்.'

காலத்தின் சதுரங்க பலகையில்
முனியான்டி விலாஸும் நானும்
ஆடும் ஆட்டத்தில்
இரண்டே இரண்டு
நேர் எதிர்ப் புள்ளிகளில்
எப்போதும்
சந்தித்துக் கொள்வோம்.

திசையைத் தொலைத்த
திசையிலிருந்து
சதுரமான தட்டுடன்
எதிர்ப்படும் சர்வர்கள்.
அந்தப் பெருந்தட்டில்
வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்
என் இருப்புக்குச் சவால் விடும்.
நண்டு, காடை, கோழி, ஆடு,
மீன், எறா, சுறா,
மூளை, குடல், ஈரல்
எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு
தட்டுக்கு தகுதியற்ற
'சிங்கிள் ஆம்லெட்' என்பேன்.
புறக்கணிப்பின் பெரும் வலியை
எனக்களித்து
உள்ளே செல்வார்கள்.

***

கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில் யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
'மீன் குழம்பாவது கிடைக்குமா?'
எனக் கேட்டு
நிறம் மங்கிய
பீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும்
கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.

பெருந்தட்டுக்கள் மறைந்து
விலைப்பட்டியல் அட்டையை
நீட்டும்துரித உணவகங்கள்
பெருகிவிட்ட இன்றும்
முனியான்டி விலாஸ்களுக்கே
மனம் விரும்பிச் செல்கிறது.
உணவின் ருசி
உணவில் இருப்பதில்லை.
புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது.
**
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய்
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய் என்கிற கவிதையில் ஒரு பெரிய உணவகத்திலிருக்கும் அந்த குழாய் முன் வந்து போகும் பலரை விவரிக்கிறார் - அம்மாவோடு வந்திருக்கும் ஒரு சிறுவன், கணவனோடு வந்திருக்கும் ஒரு புதுப்பெண், மாநாட்டிற்கு லாரியில் வந்து நகரை சுற்றிப் பார்க்கும் விவசாயி என்று பலர் வந்து அந்த குழாய் முன் நின்று விட்டுப் போகிறார்கள். அந்த சிறுவனும் புதுப்பெண்ணும் அந்த நகரின் ஒரு புதுமையை அறிந்த பெருமிதத்தோடு செல்கையில் அந்த விவசாயியை பற்றி மட்டும் இப்படி சொல்கிறார்.

அந்த விவசாயி
மதிய வெயிலில்
மிதந்து செல்லும்
மேகங்களை நோக்கி
கையை நீட்டி நீட்டி
"தண்ணீர் வருமா? " என்று
சோதித்துப் பார்க்கிறார்.

அடர்ந்த புகையைப் போல்
அந்த மேகங்கள்
கலைந்து காணாமல் போகின்றன.
**நன்றி: நா. முத்துக்குமார்.

Friday, June 1, 2007

குழந்தைகள் நிறைந்த வீடு..

கருப்பு வெள்ளை புகைப்படம்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்.
*

அடகு வைத்த
கடிகாரத்தை
அடிக்கடி

நினைவுப்படுத்தும்..
மணிக்கட்டில் தழும்பு

*
இறந்த பாட்டியின்
மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.

*
தோட்டத்தையும்

பின்பொரு பெண்ணையும்
சேர்த்து ஜாபகப்படுத்துகிறது
நூலகப் புத்தகத்தில்

உலர்ந்த செம்பருத்தி.
*
யாரும் தீண்டாமல்
நகரும் தீப்பெட்டி
உள்ளே பொன்வண்டு.
*
எழுந்து நடந்தான் புத்தன்
போதிமரத்தடியிலும்
எறும்புகள் கடிக்கின்றன.
*

இன்று வேண்டாம் நிலா
நாளை வா
ஊட்டுவதற்குச் சோறில்லை.
*
யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்.
*
எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை.
*

உடம்பெல்லாம்
வளையல்கள்
தென்னை மரம்.
*

சிக்னலுக்குக் காத்திருக்கும்
கூட்ஸ் ரயிலுக்குக் கீழே
பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன.

*
நாள் தோறும்
இரண்டு முறை
சரியான நேரம் காட்டும்
ஓடாத கடிகாரம்.
*

கிராமத்து நாவிதன் முன்
வரிசையாய் பங்காளிகள்
தாத்தாவுக்குக் காரியம்
**நன்றி: நா. முத்துக்குமார்

அறிவுமதி கவிதைகள..

ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள்
நாம்!
அன்பே!அன்பே!
*
தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?
*
மறப்பதென்றால்
அது முடியவில்லை.
நினைப்பதென்றால்
மனம் சலிப்பதில்லை.
*
நல்ல மழை
பூக்காரி வீடெல்லாம்
(கூடை நிறையப்)
பூவாசம்
*
பாதை நெடுக
'அம்மா தாயே!'
எப்படி சாத்தியம்
ஐஸ்கிரீம் தின்றுச்
சிரித்துப் பேசி... ஓ...
*
ஊருக்குத் திரும்ப
ஒரு வாரம் ஆகும்!
அய்யோ!
நின்று கொண்டேயிருப்பாள்
என் குழந்தை பொம்மை!
*
கூலி விவசாயி!
பசி!
எலி வளைக்குள் நெல்!
*
பழித்துக் காட்டாதே குயிலே!
அந்தக் குழந்தையின் தாய்
உயிரோடில்லை
*
மலரும் பூக்களிலிருந்து
"அம்மா!"
"அம்மா!"..
**
மனித உரிமை பேசி
மரண எதிர்ப்புபேசி
நீளும் பிச்சைக் கைகளில்
உதிரும்
வெள்ளைக்காசு
நக்க
தமிழின் அடம்புக்குள்
நுழையும்
சூழ்ச்சி பொறுத்து
அடையாளத்தேடலுக்கு
அலையும்
சில
மிக நல்ல
மிக மிக மிக
நல்ல நல்ல
முற்போக்குகளும்!
**
முருகனைக்

குப்புறக்கிடத்தி
முதுகில்
வேல் செருகி
விளையாடும்
விநாயக
விளையாட்டின்
வேதனை
உணராமல்
எருக்கம் பூ மாலை
கிளாக்காய்
பிரப்பம் பழம்
காகிதக் குடை
விற்கும்
எம்
நந்தனின் சொந்தங்களாய்
அட்லாண்டிக்கின்
வெளியே
புத்தகக்கடைகள்!

அவாள்களின் விற்பனை
அம்பலத்தாடுவான்
போலே
உள்ளே
உள்ளே
மேலே
மேலே
**
பொட்டலச்சோற்றை
பொறுப்பாய் வாங்கி
இலைச்சோற்றை
ஏகடியம்
செய்யும்
வெட்கங் கெட்ட
தன்நிலை
உணரா
தாழ்வு அறிவுகள்
**
புலம்பெயர்ந்து
பிழைக்கப்
பழகி
துரோகக் காசுகள்
உலுக்கப்பழகி
தங்கை மச்சான்
உறவுகளாக
அழைத்துவந்து
அகதிகள் அல்லல்
அறவே மறந்து
உயர்தர மதுவாய்
தாமிரபரணியின்
குருதியை
ஈழக் கடலின்
குருதியைக்
கலந்து குடித்து
கலந்து குடித்து
தொட்டுக்கொள்ள
எடுக்கும்
சேரனின்
மீன் துண்டுகளில்
இருக்கலாம்
கடலில் சிதறிய
எம்கறும்புலித்
தங்கைகள்

தம்பிகளின்
சதைத் துணுக்குகளும்!
**
நன்றி:அறிவுமதி

சுவடுகள்..

அந்த இரயிலில்
நான் ஏறும் போதெல்லாம்
பார்க்கிறேன்
இறங்கிப்போகும் அவளை!
*
அச்சமில்லை.. அச்சமில்லை
ஞாபகத்தில்.. தேனருவி
உச்சரிக்க முடியாத உன் முகம்!
*
பந்தலடி அம்மியில்
மல்லிகைப் பூக்கள்
இன்னும் வராத அவள்!
*
காலதாமதமாகவே வரட்டும்
காத்திருப்பாள்.. உண்மைதான்
தண்டவாளத்தில் நத்தை.
*
கோபத்தை வாழ்த்தினேன்
மூன்று நாட்களாய்ப் பார்க்காத
உன் சோர்ந்த முகம்.
*
மனம் நிறைய ஞாபகங்கள்
பிறகு ஜன்னல் திறப்பேன்
போய் வா..
வானவில்!
*
உன்னிடமிருந்து கடிதம் வருமா!
என் காலண்டர் முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்!
*
தனித்த அறையில் நான்.
நீயோ திமிர்பிடித்த
வாலிபமும் வெளிச்சமாய்..
சில கவிதைகள்!
*
கண்ணாடியைச் கொத்தும்
சந்தேகச் சிட்டு.
அவளுக்கும் சில அலகுகள்!
*
எங்கள் காதலின்
எலும்புகள் மட்டும்
அவள் போன தண்டவாளங்கள்..
**நன்றி:அறிவுமதி

அணுத்திமிர் அடக்கு..

கொடிமரம்
ஒடி!

சிறைகள்
இடி!

இராணுவம்
அழி!

அரசுகள் அற்ற
அரசினைச் செய்!

கனவைச்
சுருட்டு!

வானத்தைத்
தின்னு!

கிரகங்களைக்

கொறி!

காற்றைக்
குடி!


புனிதம்
விரட்டு!

தீது
செயற்கை!

எவரையும்
வியக்காதே!
மதி!! மதி!! மதி!!

காத்திருக்காதே!

கற்பு
உடலுக்கு!

காதல்
உயிருக்கு!

காதலி..
*
அர்த்தம்
இல்லை
சொல்லில்!

அர்த்தம்

இல்லை
யாப்பில்!

அர்த்தம்
இல்லை
இல்லை
கவிதையிலும்!

கண்டு
தெளி
கொச்சையுள்!

**நன்றி:அறிவுமதி

கடைசி மழைத்துளி..

அகதி முகாம்
மழையில் வருகிறது
ண் மணம்.
*
அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.
*
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.
*
விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.
*
தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.
*
இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.
*
விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.
*
வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.
*
எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.
*
தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.
*
பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.
*
மரக்கிளையில் குழந்தை

வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.
*
வாழ்க்கை என்னடா வாழ்க்கை

கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!
*
எவன் நிலம்!

எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!
*
நந்தனைக் கொன்றதே சரி

குலதெய்வம் மறந்த
குற்றவாளி.
*
நொறுக்குவான் பண்ணையாரை

எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.
*
பிணப் பரிசோதனை

அய்யர் குடலிலும்
மலம்.
*
தேவர் படித்துறை

பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!
*
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
*
ஊருக்கு ஊர் வட்டிக்கடை

பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.
*
குருட்டுப் பாடகன்

தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.
*
அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.
*
ஒரே தலையணை

வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.
*
இரண்டு அடி கொடுத்தால்தான்

திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.
*
எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.
*
கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.
*
ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்
*
கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு
*
'இந்தியா டுடே'யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.
*
இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்
*
உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.

ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது
**நன்றி:அறிவுமதி

வலி..

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!
*
பிறந்த குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!
*
கடல் கடந்து
பார்க்க
வந்திருக்கின்றன
சோறு வைத்த
காக்கைகள்!
*
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!
*
ஆழிப் பேரலைகளும்
எங்கள்
பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப் போய்
கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்!
*
இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீர்கள்!
நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம்!
*
வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்!

இல்லறம்

எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்
*
அங்கே
'அவனா?'
என்று கேட்டு
அடித்தார்கள்
வலிக்கவில்லை

இங்கே
"திருடனா?"
என்று கேட்டு
அடிக்கிறார்கள்
வலிக்கிறது.
**
அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்!
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை
*
பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறீர்கள்!
உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்
*
தமிழில்தான்
விசாரித்தார்கள்
தமிழர்களாய்
இல்லை
*
மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை!
"தமிழர்சதுக்கம்."
*
அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்!

இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்
*
தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்!

தப்பித்தவர்கள்
'ஏன்?'களுக்கு
இரையானோம்
*
எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது!

உங்களால்
இரங்கி
வந்து
உரையாடமுடியவில்லை!
*
இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.
*
நேற்று வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்!
*
முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது...
யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!’
**நன்றி:அறிவுமதி

Wednesday, May 30, 2007

மறுபடியும்..

காலில்
கட்டிக் கொண்டிருக்கிற
இலங்கை
போர் சலங்கை ;
அதன் ஆட்டத்தில்
அதிர்கின்றன...
தமிழர் வாழும்
திக்குகள் ;
புன்னகப்பரோ புத்த
பிக்குகள்?
**
போற்றுகிறார்கள்
புத்தன் பல்லை;
புறக்கணிக்கிறார்கள்
புத்தன் சொல்லை;
அன்னணம் இல்லையேல்
ஆகுமா புத்த பூமி
யுத்த பூமி?
**
இந்தியாவில்
இருந்தவரையில்
புத்தன்
போதிமரத் தடியில்;
இலங்கைக்கு
இடம் பெயர்ந்த பின்
புத்தன்
சாதிமரத் தடியில்!
**
சிங்களச் சாதி;
தமிழச் சாதி;
பகுத்துப் பார்க்கிற
பவுத்தம் ;
அது போலுளதோ
வேறு அபத்தம்?
**
ஆதி நாளில்
அந்த நிலம்...
தமிழன் வியர்வையில்
தழைத்ததை விளக்கும்
தேயிலை; ஆனால் அதற்கு
வாயிலை!
**
அண்மையில்
அகதிகளாய்ச் சிலர்...
கலம் ஏறி வந்தனர்
கண்ணீர்க் கடலோடு;
தரை காணா போயினர்
தண்ணீர்க் கடலோடு!
**
பயணித்தபடகு...
கவிழ்ந்து
கடலெங்கும் சவம்;
அது சவமல்ல; அந்த
சித்தார்த்தன் தவம்!
**நன்றி:கவிஞர் வாலி ,குமுதம்.

தபூ சங்கர் கவிதைகள்..2

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது? என்று!"
**
வீட்டிற்கு
ஒரு மரம்
வளர்ப்பார்கள்!
உங்கள்
வீட்டில் மட்டும்
ஏன்
ஒரு மயில்
வளர்க்கிறார்கள்?
**
கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில்
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.
**
காற்றோடு
விளையாடிக் கொண்டிருந்த உன்
சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்!
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.
**
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பிச் சாப்பிடும்போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகிவிடுகிறது..
**
என்னுடையது
என்று நினைத்துத்தான்
இதுவரையில்
வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை
உன்னைப் பார்த்ததுமே
பழக்க்க்ப்பட்டவர்
பின்னால் ஓடும்
நாய்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு!
**
வருடத்துக்கு ஒரு முறை
சீதா கல்யாணம்
நடப்பது மாதிரி
உன்னையும் நான்
வருடம் ஒரு முறை
திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
**
நீ
யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
**
எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு
போதும்!
**
முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்
பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.
**

கால ராட்சசன்!

யுகம்
அவன் நகம்!
உள்மூச்சு
ஜனனம்!
வெளிமூச்சு
மரணம்!

நட்சத்திரங்கள்
அவன் துடைத்தெறிந்த
தூசுத்துகள்கள்!

சந்திர சூரியர்கள்
அவன் காலிடை
மிதிபடுகல்லிடைக்
கிளர்ந்த சிறுபொறிகள்!

வியர்வைத் தாரையின்
ஒரு துளி கடல்!
அதில் விளைந்த
கிருமிகள்,
ஜீவராசிகள்!

மழிக்கையில் உதிர்ந்த
மருக்கள் மலைகள்!
கட்டைவிரல்
நகம் இடறச்
சிதறிப்போன சிற்றில்கள்,
சாம்ராஜ்ஜியங்கள்!

போர்கள்
தெருக்கூத்து!
கொட்டாவி
பூகம்பம்!
பெருமூச்சு
புயல்!

மனிதர்கள்!
மைக்ரோ வினாடிகளில்
அவன்
படைத்துப் படைத்து
உடைக்கும் குமிழ்கள்!

பூகோளம்
சரித்திரம்!
தத்துவம்
இலக்கியம்!
கலை கலாசாரமெல்லாம்
அரைகுறையாய் எழுதி
அவன்
எச்சில் துப்பியழிக்கும்
சிலேட்டுச் சித்திரங்கள்!

விஞ்ஞானம்
அவன் ஒழுகவிட்ட
ஒரு சொட்டறிவு!
பூமியாகப்பட்டது
அவன் கணக்கில்
சில நாட்கள்
பறக்கவிட்ட பலூன்!

இஃதிவ்வாறிருக்க -காலத்தை
வென்றதுகள் என்று
தருக்கிச்
சிலதுகள் திரியுதுகள்
சிகையலங்காரப் பொழுதிலவன்
தலையினிழிந்த மயிரனையதுகள்.


(மயிரனையது-மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார். )
**நன்றி:வைரமுத்து, கொஞ்சம் தேனீர் நிறைய வானம்.

மெழுகுவத்தி!

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு
சிதைவதை எண்ணியே
அந்தத் தாய் அழுகிறாள்

மேனியில்
தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ
நரம்பிலே
தீ விழுந்து
மேனி எரிகிறது

மரணத்தை வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே
விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம்
முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு நீர்ப்பயிர்
வளர்க்கிறது

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத்
தீ நாக்கு
எத்தனை அழகாய்
உச்சரிக்கின்றது?

எந்த துயரத்தை
எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது
இந்தப் பேனா?
கண்டு சொல்லுங்கள்!

கண்ணெதிரே
நடப்பதென்ன
கொலையா?
தற்கொலையா?

எப்பொழுதுமே
இதற்குத்
தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?

இந்தத்தீக்குளிப்பின்
முடிவில்
மரணத்தின் கற்பு
ருசுவாகிறது

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள்
முட்டி மூழ்கும்

அங்கே வடிவது
கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?
ஓ!
கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகுதான்
உயிர் வருகிறது

மனிதனைப் போலவே
இந்த அஃறிணையும்
நான்
அதிகம் நேசிப்பேன்!
எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்
என் இரத்த நெய்யில்
இது
நம்பிக்கைச் சுடரேற்றும்!

வாருங்கள் மனிதர்களே!
மரணத்திற்கும் சேர்த்து
நாம்
மெளன அஞ்சலி
செலுத்துவோம்!
அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.
**நன்றி:வைரமுத்து,திருத்தி எழுதிய தீர்ப்புகள்.

Tuesday, May 29, 2007

நீ!

நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!
**
உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
மின்னஞ்சல்கள் அவமதிப்பு,
குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!
**
உன் நினைவுகளே
வாழ்க்கை
என்றான பிறகு
நீ
தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?
**
குட்டி போடும்
என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..
**
செடி கொடி மரத்தில்
மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!
**
என்ன எழுதினாலும்,
உன்னுடைய
“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!
**
யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது
என்றேன்
தோழி, நீ அழைக்கும்
தொலைபேசி மணி
ஓசை கேட்கும் வரை..
**
என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...
**
அத்தி பூத்தது...
உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!
**
உன்னிடம் பேச
எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
**
என்னை கொல்ல
வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
**
மன்னித்து விடு!
நான் உன்னை
மறக்க
மறந்துவிட்டேன்….
**
செடியில் பூத்துக்கொண்டே
உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??
**
உபயம்: இணையவலை

Monday, May 28, 2007

திமிரழகி!

மாலையில் நண்பனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.
என்னுடன் படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே அதிசயமாக வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத்தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச அழகி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்... சில நேரம் யார் நீ? என்பது போல் பார்த்துப் போவாய்.
இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக, உன்னுடன் வந்தவளை என் தோழி என்றும், உன்னை என் க்ளாஸ்மேட் என்றும் சொன்னேன். க்ளாஸ்மேட் என்று சொல்லும்போது உன் முகத்தில் ஒரு கனல் எழுந்து அடங்கியதையும் கவனித்தேன். உடனே கிளம்பறோம் என்று உலாவைத் தொடர்ந்தீர்கள்.

அடுத்த நாள் கல்லூரியில் உனக்கு உற்சாகமாக ஒரு ஹலோ சொன்னேன்.
ஆனால், நீயோ கவனிக்காமல் காற்றாக போனாய்.
"அவ உன் மேல் கோபமா இருக்கா! "என்றாள் எனக்கும் உனக்குமான தோழி.
"ஏன்?" என்றேன் வியப்பு காட்டாமல்.
"நேத்தைய கோபம்! "என்றாள்.
அதானே உண்மை! தோழியைத்தான் தோழினு சொல்ல முடியும். மனசுக்குள்ள ஆசை ஆசையா விரும்பற பெண்ணை, தோழினு சொல்லி நட்பைக் கேவலப்படுத்த எனக்குத் தெரியாது என்றேன்.
அதிர்ந்துபோனாய் நீ! உன் முகத்தில் கோபம் சலங்கை கட்டி சதிராட ஆரம்பித்தது. ஆனால், அதைத் துளியும் வெளிக் காட்டாமல், வேகமாக என் பக்கம் திரும்பினாய்... நீங்க நெனைச்சாப் போதுமா... நாங்க நெனைக்க வேண்டாமா? வெடுக்கெனச் சொல்லி விட்டு வேக வேகமாய், புயல் மாதிரி போய் விட்டாய்.
நானோ ஏமாற்றத்துடன் அப்போதே கல்லூரியி லிருந்து வெளியேறினேன்.

அடுத்த இரண்டு நாட்களுக்குக் கல்லூரிப் பக்கமே எட்டிப் பார்க்க வில்லை.
ஆனாலும் மாலைகளில் கடற்கரைக்குப் போய்,
எப்போதும் நான் அமர்ந்திருக்கும் இடமருகில் மறைந்து நின்று, நீ வருகிறாயா... வந்து என்னைத் தேடுகிறாயா என்று பார்ப்பேன்.
நீயும் வந்தாய். வந்து என்னைத் தேடிவிட்டு, ஏதோ முணுமுணுத்தபடி திரும்பிப் போனாய். "டேய் மகனே... சத்தியமா இது காதல்தான்! "
என்று என் காதில் கிசுகிசுத்தன நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்.
மூன்றாம் நாள் மாலையில், இன்னொரு நண்பனுடன் கடற்கரையில், என் இடத்தில் அமர்ந்திருந்தேன். தோழியுடன் வந்த உன் கண்களில் மின்னல். அது மின்னல் என்பதனால் அடுத்த கணமே காணாமல் போனது.
எங்கே காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? என்றாள் உன் தோழி... ஸாரி, என் தோழி. லவ் ஃபெயிலியர்! என்றேன் கூசாமல்.
உன் முகத்தில் ஒரு எகத்தாளப் புன்னகை எழுந்து அடங்கியது அவசரமாக.
"சரி, அதை விடு " என்று நானே பேச்சை மாற்றி, என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு, உங்கள் இருவரையும் என் தோழிகள் என்று சொல்லி, பிளேட்டைத் திருப்பிப் போட்டேன்.
அதுவரை அமைதியாக இருந்த நீ இப்ப மட்டும் நட்பைக் கேவலப்படுத்தலாமா? என்று நமக்குப் புரிகிற பாஷையில் வெடித்தாய்.
"இதில் என்ன கேவலம்? உண்மையைத்தானே சொன் னேன்! "என்றேன்.
"அப்போ... நீ என்னைக் காதலிக்கலியா? "

ஆவேசம் கொண்ட அம்பிகை யான நீ,
"அய்யோ... நீ சரியான மக்குப் பிளாஸ்திரிடா!
அன்னிக்கு நீ என்னை கிளாஸ்மேட்னு சொன்னதுக்கு,
நான் கோவிச்சுக்கிட்டப்பவே உனக்குப் புரிஞ்சிருக்க வேண்டாமா? "
என்றாய் படபடக்கும் பட்டாம்பூச்சியாய்.
"அப்படி வா வழிக்கு!" என்றேன்.
"மண்ணாங்கட்டி... தனியா கூட்டிட்டுப் போயி, ஒரு ரோஜாப்பூ கொடுத்து, காதலை அழகா சொல்லத் தெரியாதா உனக்கு?" என்றாய் குறுகுறு பார்வையுடன்.
"ஓஹோ... மகாராணிக்கு இதுதான் பிரச்னையா? வாங்க மேடம் என்னோட! "என்று உன் கையைப் பிடித்து இழுத்துப்போய், ஒரு பூக்கடை முன் நிறுத்தி...

‘எல்லாப் பூவையும் குடுங்க!’ என்று பூக்காரம்மாவிடம் கேட்டு வாங்கி, அப்படியே பூக்கூடையை உன் முன் நீட்டி, ‘நான் உன்னைக் காதலிக் கிறேன்!’ என்றேன்.
வெள்ளமென வெட்கம் பாயச் சொன்னாய்...

"இந்த ராட்சஸிக்கு ஏத்த ராட்சஸன்டா நீ! "
**

உன்னை விட
தீயணைப்புத் துறை
எவ்வளவோ மேல்.
வீடு எரிந்தால்
அது அணைக்க வரும்.
ஆனால், நீயோ
என்னை வந்து
அணைத்துவிட்டு
எரியவிடுகிறாய்!
**
நிலவைச் சுற்றி வர

விஞ்ஞானிகள்
செயற்கைக் கோள்
அனுப்புவது மாதிரி
உன்னைச் சுற்றி வர
என்னை அனுப்பியிருக்கிறது
காதல்!
** நன்றி..தபூ சங்கர்

தபூ சங்கர் கவிதைகள்..

வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.
**
கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**
நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..
**
எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..
**
நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!
**
நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்
**
உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……
**
உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்
**

மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு
**
எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!
**
இதற்கு முன்
யாராவது
இப்படி உன்னைப்
பார்த்ததுண்டா?
எப்படி?
“ ஹய் பொம்மை ! “
என்று !
**
உன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.
**
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.
**
சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து
கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!
**
இவை இப்படித்தான் என்று
நான் நினைத்துக்கொண்டிருப்பவற்றை கூட
எவ்வளவு சுலபமாய் பொய்யாக்கிவிடுகிறாய்?
உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான்
எனகின்ற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற
ஒரு சின்ன புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே !
**
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !
**
ஒரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!
**
அழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..
**
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
**
என் வீடு
எனக்குப் பிடித்திருகிறது
எதிர் வீட்டில்
நீ இருப்பதால்!
**
உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!
**
நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.
**
என்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.
**
காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.
** தபூ சங்கர்

Thursday, April 26, 2007

என்னைத் தெரியுமா?

கைவிளக்கில்
விழுந்த நிழல்
விதிமழையில்
கலைந்த
ஓவியம்
என்னைத்
தெரியுமா ?

இரவினுள்ளே
ஒளிந்த இருட்டு
இல்லை
என்னும் சொல்லினுள்
இல்லாத அர்த்தம்
என்னைத்
தெரியுமா ?

தேவைகளைத் தேடிய
தேவையற்ற பயணம்
துயரத்தின் கண்களில்
துளிர்விடும் கண்ணீர்
என்னைத்
தெரியுமா ?

வேதனைகளில்
வீசும் வாசம்
சோதனைகளின்
சுவாசக் காற்று
என்னைத்
தெரியுமா ?

சூறாவளியின்
பிறப்பிடம்
வெள்ளக்காட்டின்
இருப்பிடம்
என்னைத்
தெரியுமா ?

ஓடும் நதியினில்
விழுந்த சருகு
கடலலையில்
அமர்ந்த மழைத்துளி
என்னைத்
தெரியுமா?

என்னைத் தேடியே
என்னைத் தொலைத்தவன்
எண்ணக் கவிதைகளில்
என்றும் வாழ்பவன்
என்னைத் தெரியுமா ?
** நன்றி: maraththadi.com

Friday, April 20, 2007

காதல் படிக்கட்டுகள்

என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.
*
காதல்
கொடுப்பதன்று.
எடுப்பதன்று.
ஈர்த்துக் கவிழ்ப்பதன்று.
மடக்குதல் அன்று.
மடங்குதல் அன்று.
எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று.
இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்…
தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து…
உள்திரும்பித் திருப்தியுறுவது.
இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.
அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும்.
*
நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது.
பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது.
காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது?
காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?
அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா?
ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும்
பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக…
எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.
*
அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது…
உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது.
கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!
வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?
*
இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன…
அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…
உடல்களால் இணையாவிட்டால் என்ன…
உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று.
பொய்!
*
அது உடல் கடந்து நடப்பதா?
உடல்களால் நடப்பது.
சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.
உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம்.
காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.
*
ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள்.
அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.
*
வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும்.
பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.
அதனால்தான்…
அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது.
*
அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…
நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!
இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்…
காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்!
காதலிகளைச் சந்தித்திருக்கலாம்.
காதலன்களைச் சந்தித்திருக்கலாம்.
காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!
*
சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது.
காதலைப் போல ஒன்று எழலாம்.
அதுவே காதல் ஆகாது.
காதலென்பது என்ன…
இழந்துவிட்டு வருந்துவதா?
பிரிந்துகொண்டு அழுவதா?
இல்லை…இல்லை..
*
'காதல்… காதல்… காதல்…
காதல் போயின்
சாதல்… சாதல்… சாதல்…'
சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது?
அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது.
ஆனாலும் சொல்கிறேன்…
அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது.
ந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது.
அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது.
அவனது போராட்ட உணர்வுக்குள்
ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள்
என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!
*
என்னை
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
அவனையும்
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை.
*
மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்…
பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்..
எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?
*
ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்…
திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…
கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும்
காதல்
என்று நம்பச் சொல்கிறீர்கள்?
*
காதலின் எல்லை
திருமணம் இல்லை
என்பதை
உணர்ந்து கொள்ளவும்
உரத்துச் சொல்லவும்
இங்கே எத்தனை பேருக்குத்
தெம்பு இருக்கிறது?
*
தம் காதலை வெற்றி கொள்ளவும்
தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும்
இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?
அதற்குக் காரணம் அவர்களல்ல;
நீங்களுமல்ல.
நானுமல்ல.
*
குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை.
நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.
*
காதல் குற்றமா?
சமூக குற்றமா?
நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும்
அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு
கடித்துக் குதறச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான்.

சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு…
வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!
*
நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள்.
காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள்.
அது இருவரின் முழுமையடைதல் இல்லை.
முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.
*
இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்…
பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…
அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம்.
அந்தப் பெண்மீது அவளது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…
அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கள் மட்டுமல்ல…
அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…
செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம்.
*
காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.
*
மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள்
கொஞ்சம்
உறங்கி விட்டாலென்ன?
*
வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது.
ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.
காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம்.
உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம்.
அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.
வரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை.

உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக…
ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக…
அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…
ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக…
இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை.
*
பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது.
பேசியிருக்கீர்களா நீங்கள்?
நான் பேசியிருக்கிறேன்.
ஆணாக இருந்தல்ல.
பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன்.
என்ன சிரிக்கிறீர்கள்?
பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!
*
பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை.
ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.
இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!
*
அழகியக் கூண்டு செய்து…
அதற்குள் அடக்கி வைத்து…
'இது என் பறவை..
இது எனக்கு…
எனக்கு மட்டுமே'
என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும்.
விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.
*
உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல்.
தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே!
தருவதற்கு ஆண் யார்?
தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!
முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல்.
எந்தச் சிறைக்குள்ளும் …
எந்த விலங்குக்குள்ளும்…
அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.
*
என்னைச் செதுக்கியது பெண்மை.
என்னில் சிற்பமானது காதல்.
எனக்குள் எல்லாமும் அதுதான்.
எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!
*
பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க…
கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…
அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க…
பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ...
இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய…
போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க…
அதுதான்…
ஆம் …
அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.
*
காதல் கற்றுத் தரும்.
காதல் எல்லாம் தரும்.
காதலியுங்கள்.
புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம்.
உணர்ந்து கொள்வதை?
*
அணுஅணுவாய்
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.
*
பின்குறிப்பு:
பல விஷயங்களை ஆணுக்கு என்று சொல்லியிருந்தாலும் அது இரு பாலருக்குமே பொருந்தும் என்பது என் எண்ணம்
**நன்றி:அறிவுமதி..