Thursday, January 30, 2014

முரண் தொடை!!

** நன்றி..தபூ சங்கர் ,விகடன்..

Saturday, October 3, 2009

நெஞ்சவர்ணக்கிளி…

உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும்
வெகு தூரமாயிற்றே
தினமும் இரவில் தனியாக
என் கனவில் வர
உனக்குப் பயமாக இல்லையா?

நேற்று
எனக்கு உறக்கம் வந்த பிறகுதான்
உன் கனவு வந்தது
இன்று
உன் கணவு வந்த பிறகுதான்
எனக்கு உறக்கம் வந்தது!

உன் கனவில் நான் இருக்கும் போது
என் அறைக் கதவை
யாராவது தட்டினால்
நம்மைப் பாராட்டி
காதல் கைதட்டுவதாகவே
நினைத்துக்கொள்கிறேன்!

மனைவியாக நீ
என்னருகில்
உன் கனவுகளைக் காணும்
நாளுக்காகக் காத்திருக்கிறது
என் உறக்கம்!

இந்தக் கனவுகள் எல்லாம்
சொல்வது ஒன்றே ஒன்றுதான்…
உறக்கத்திலும் நான் உன்னைக்
காதலிக்கிறேன்!

** நன்றி..தபூ சங்கர் ,விகடன்..

Wednesday, May 6, 2009

அறிவுமதி கவிதைகள்-3..

செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!
***
பிழைக்கும் வழி

மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!


***
நீரோட்ட‌ம்!

கர்நாடகாவிலும்
இந்து!

தமிழ் நாட்டிலும்
இந்து!

இந்துக்கு இந்து
குடிநீர் த‌ர‌மாட்டாயா

இதுதானா இந்துத்துவா
உங்க‌ள்
தேசிய‌
நீரோட்ட‌ம்!

***

அய்யாவை நம்பினோம்

அதிகம் படிக்காத

அய்யாவை
நம்பினோம்
நமக்குப்
பல்கலைக் கழகங்கள்
கிடைத்தன !

பல்கலைக் கழகங்களில்
படித்த
இவர்களை
நம்பினோம்
நமது
அறிச்சுவடிகளும்
தொலைந்து போயின !
***
**நன்றி:அறிவுமதி

ஒரு வலியா இரு வலியா?? [வலி]

நடந்து அழுதமின்னா
நடந்த
எடம்
ஆறாகும்!

நின்னு அழுதமின்னா
நின்ன
எடம்
குளமாகும்!

புரண்டு அழுதமின்னா
புரண்ட
எடம்
கடலாகும்!
★★★

ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!

இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!
★★★

பூன வழி மறிச்சி
போகாதே
என்று சொல்ல

நாயி வழி மறிச்சி
நானும்
வர்றேன்
என்று சொல்ல

வளத்த
பூச்செடிய
வாகாக
வருடிவிட்டு

படிச்ச
படித்துறைய
பாத்து
அழுதுபுட்டு


வாறேன்னு
சொன்னதுமே
வாகை
மரமங்கே
வாடி
அழுததய்யா!

போறேன்னு
சொன்னதுமே
பூவரசு
மரமங்கே
புலம்பி
அழுததய்யா!
★★★

தூங்க மகனுக்கு
அங்க
தூளி
கட்ட
முடியலய்யா!

வெளஞ்ச
மகளுக்கு
அங்க
வேலி
கட்ட
முடியலய்யா!

நாய் குரைக்கும்
சத்தத்துக்கு
நாங்க
நடுங்காத
நாளுமில்ல!

போய்ப் பதுங்கும்
பொந்துக்குள்ள
அய்யோ
புடுங்காத
தேளுமில்ல!
★★★

பட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
பத்தி
எரியுமய்யா!

அவுக . . .
சுட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
துடிச்சி
எரியுமய்யா!
★★★

எங்கமன வேதனைய
எழுத்தாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
எழுத்தாணி
உருகுமய்யா!

பாவி மன
வேதனைய
படமாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
படச்சுருளும்
கருகுமய்யா!
★★★

ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!

இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!
★★★
**நன்றி:அறிவுமதி

வலி.. - 2

மீனை
அரியும்போது
கிடைத்தது
குழந்தையின்
கண்
★★★
பச்சிளங்குழந்தையை
நெடுக
உளியால்
கொத்தியிருக்கிறார்களே
புத்தர் சிலைக்கு
முயற்சி செய்திருப்பார்களா ?
★★★
சாலைபோடும்
பெரு வண்டியைப்
பார்த்ததும்
பதறிப்போய்
பதுங்குகின்றன
விளையாடிக்
கொண்டிருந்த
குழந்தைகள்!

★★★
மருந்து பற்றி
படித்துக்
கொண் டிருக்கையில்
விழுந்தது மரணம்

★★★
ஆழிப் பேரலைகளும்

எங்கள் பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப்போய்
கொல்லத்தான் செய்தன
ஆனாலும்….

★★★
**நன்றி:அறிவுமதி

Tuesday, May 5, 2009

நியூட்டனின் மூன்றாம் விதி - 2 !!

வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்!

கிணற்றடித் தண்ணீரை
குடித்து வளரும்
எங்கள் வீட்டிலும்.

வதங்கிச் சுருண்டு
இலைகளில் தொங்கும்
செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து
அம்மாவினுடையதும்
அக்காவினுடையதுமாக
விரல்களைக் கடன் வாங்கி
பச்சையாய் துளிர்க்கும்
வெண்டைக்காய்ச் செடிகள்
அத்தோட்டத்தின் தனித்தன்மை.

'மூளைக்கு நல்லது' என்று
மருத்துவ குணம் கூறி
அதன் காய்களில் ஒளிந்திருக்கும்
என் அல்ஜிப்ரா கணக்கி இற்கான
விடைகளை நோக்கி
ஆற்றுப்படுத்துவாள் அம்மா.

மதிய உணவில்
பெரும்பான்மை வகிக்கும்
அதன் 'கொழ கொழ' த் தன்மை
வழக்கம்போல் பள்ளியில்
என் விரல்களில் பிசுபிசுத்து
வராத கணக்கைப் போல்
வழுக்கிக் கொண்டிருக்கும்.

முன்புக்கு முன்பு
அதன் காம்புகள் கிள்ளி
கம்மல் போட்டுக்கொள்ளும்
அக்கா இப்போது,
வைரங்களை நோக்கி
விரியுமொரு கனவில்
' உங்களுக்கு வாக்கப்பட்டு
என்னத்தைக் கண்டேன்' என்று
அத்தானிடம் பொருமுகி்றாள்.

கடன்முற்றித் தத்தளித்த சூழலில்
கியான்சந்த் அண்ட் சன்சுக்கு
கைநடுங்கி கையெழுதுத்திட்டு
வீட்டுடன் தோட்டமும்
விற்றார் அப்பா .

முன்வாசலில் தொங்கும்
குரோட்டன்ஸ் செடி கடந்து
பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;
கூர்முனை ஒடித்து;
தள்ளு வண்டிக்காரனிடம்
பேரம் பேசுகையில்
இப்போது உணர்கிறேன் ............

ஒவ்வொரு வெண்டைக்காயிலும்
ஒளிந்திருக்கிறார்கள்
மென்மையான
விரல் கொண்ட
ஒரு அம்மா ;

கனவுகள் விரியும்
ஒரு அக்கா ;

கைகள் நடுங்கும்
ஒரு தந்தை ;

மற்றும்
கணக்குகள் துரத்தும்
ஒரு பையன்.
****

மேல் வீட்டுக்காரன்!
மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம்
அதிகப்படியானது.

உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில் .
திட்டமிட்டு நகர்த்தும்
சாமார்த்தியமும் உனக்கில்லை.

பாக்கு இடிக்கும் பாட்டி;
சதுர அம்மியில்
சார்க் புர்ரக்கென்ற
குழவி நகர்த்தும் அம்மா;
ஏதேதோ பாட்டுக்கெல்லாம்
எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;
என
உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னை பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா.......

தலையணையையும் மீறி
உன்காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி.

**நன்றி: நா. முத்துக்குமார்


அறிவுமதி கவிதைகள்-2..

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.
***
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
***
தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி !

***
மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.
***
இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.

***
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.
***
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!


** நன்றி:அறிவுமதி

உறைந்த நதி!

எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி

உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்

உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது!

**நன்றி: பழநிபாரதி

பட்டாம்பூச்சி விற்பவன்!!

பதிவுகள்!

மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது

கடன் பத்திரத்தில்.

**நன்றி: நா. முத்துக்குமார்.

பழநிபாரதி - கவிதைத்திருவிழா!

நீ இல்லாத போது...

உனக்காக
எப்போதும் வாங்கும்
இரண்டு முடி மல்லிகையை
இன்று
பூக்காரக் கிழவி
விற்காமல் எடுத்துப் போவது
எத்தனைச் சோகமானது!

*
நீ பொரி போட்டுப்
பசியாற்றிய
கோயில் குளத்தின் மீன்கள்
இன்று தண்ணீர் குடித்துத்
தண்ணீர் குடித்து
உன்னைத் தேடிய தவிப்பு
எத்தனை துயரமானது!

*
நீ வராத
வெறுமையில்
பூங்காவின் காவலாளிக்கு
ஒரு புன்னகையைக் கூட
திருப்பித் தராமல்
இன்று நான் வெளியேறுவது
எத்தனை உறுத்தலானது.

***** ***** ***** *****

யாருக்கும் தெரியாதவள்!

உடைந்து கிடந்தன
வளையல் துண்டுகள்!

உதிர்ந்து கிடந்தன
மல்லிகைப் பூக்கள்!

புகைந்து கொண்டிருந்தது
சிகரெட் துண்டு!

கிழிந்து கிடந்தது
ரவிக்கை!

காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்!

கடை வீதியில்
வளையல்
பூ
ரவிக்கை என்று
வந்து போனார்கள்
நிறையப் பெண்கள்

எந்த பெண்ணுக்கும்
தெரியவில்லை
அந்தப் பெண்ணைப் பற்றி.

***** ***** ***** *****

பெயர் தெரியாத கணம் !

பார்க்கக் கிடைத்த
கொஞ்சம் வானத்தில்
எனது தனிமையைப் பகிர்ந்துகொள்ள
வரும் போகும் பறவைகள்!

பெயர் தெர்ந்தவை சில
பலவற்றிற்குத் தெரியாது

எங்கிருந்து
எதுவரைக்குமென
யோசிக்குமுன் கடந்துவிடும்
என்னை அவை

நான் யோசித்துக்கொண்டிருப்பேன்
தடயங்களற்றுப்
பறக்கும் சுகத்தை
வீழ்ந்துவிட்ட நட்சத்திரமாய்
என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கும் வானம்

***** ***** ***** *****

சாம்பல் பொழுது!

ஊனமான
கோபுரத்தின் இடுக்குகளில்
உற்றுப் பார்க்கின்றன
நசுங்கிய புறாக்கண்கள்!

எங்கும் எதற்கும்
கதவுகள் இல்லை!

யாரும் ஓடித் தப்பிக்க
இயலாமல்
வளர்கிறது
அத்துவானப் பொட்டல்!

மனநோயாளிகளின்
சிரிப்பும் திகைப்பும்
காற்றையும் நெருப்பையும்
தொற்றி
எரிகிறது
வன்முறையிலிருந்து வன்முறை!

எது
எதனுடையதெனத் தெரியாமல்
பாதைகளை மூடுகிறது
சாம்பல்!

***** ***** ***** *****

பொங்கலோ பொங்கல்!

சம்பா செத்த வயலில்
அடர்ந்து கொட்டும் பனியில்
சில்லிடுகிறது நிலம்!

சுழன்று எரியும்
போகியின் நெருப்பில்
உழவர்கள்
கருகும் நாற்றம்!

பிழிந்த கரும்பின்
கழிவுகளில்
எறும்பின் கால்களால்
ஊர்ந்து வருகிறது
தை
பசியில் குழிந்து
எலி வளைகளாகின்றன
விவசாயக் கண்கள்!

அடிமாடுகள் சுமந்து
விரையும் வாகனத்தின்
அடியில் அதிர்கிறது
வயல்களைக் கிழிக்கும் சாலை!

உடைந்து கிடக்கும்
மண்பானையில்
அள்ள முடியாமல்
சிதறிக் கிடக்கின்றான்
என்
சொல்லாரிசிகள்!

***** ***** ***** *****

பூஜையறை!

பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்

டப்பர் வேர் டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்

ஒலிநாடா ஒப்புவிக்கும்
கந்தர் சஷ்டிக் கவசம்

கடவுள் ஏன் கல்லனான்
கேட்டான் கண்ணதாசன்
கடவுள் ஏன் ப்ளாஸ்டிக்கானான்
பார்த்துக்கொண்டிருக்கிறான் பழநிபாரதி

******

பத்திரப்படுத்த
முடியாதென்றாலும்
செடியிலே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை

**நன்றி: பழநிபாரதி