Wednesday, May 6, 2009

அறிவுமதி கவிதைகள்-3..

செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!
***
பிழைக்கும் வழி

மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!


***
நீரோட்ட‌ம்!

கர்நாடகாவிலும்
இந்து!

தமிழ் நாட்டிலும்
இந்து!

இந்துக்கு இந்து
குடிநீர் த‌ர‌மாட்டாயா

இதுதானா இந்துத்துவா
உங்க‌ள்
தேசிய‌
நீரோட்ட‌ம்!

***

அய்யாவை நம்பினோம்

அதிகம் படிக்காத

அய்யாவை
நம்பினோம்
நமக்குப்
பல்கலைக் கழகங்கள்
கிடைத்தன !

பல்கலைக் கழகங்களில்
படித்த
இவர்களை
நம்பினோம்
நமது
அறிச்சுவடிகளும்
தொலைந்து போயின !
***
**நன்றி:அறிவுமதி

0 comments: