Wednesday, May 30, 2007

மறுபடியும்..

காலில்
கட்டிக் கொண்டிருக்கிற
இலங்கை
போர் சலங்கை ;
அதன் ஆட்டத்தில்
அதிர்கின்றன...
தமிழர் வாழும்
திக்குகள் ;
புன்னகப்பரோ புத்த
பிக்குகள்?
**
போற்றுகிறார்கள்
புத்தன் பல்லை;
புறக்கணிக்கிறார்கள்
புத்தன் சொல்லை;
அன்னணம் இல்லையேல்
ஆகுமா புத்த பூமி
யுத்த பூமி?
**
இந்தியாவில்
இருந்தவரையில்
புத்தன்
போதிமரத் தடியில்;
இலங்கைக்கு
இடம் பெயர்ந்த பின்
புத்தன்
சாதிமரத் தடியில்!
**
சிங்களச் சாதி;
தமிழச் சாதி;
பகுத்துப் பார்க்கிற
பவுத்தம் ;
அது போலுளதோ
வேறு அபத்தம்?
**
ஆதி நாளில்
அந்த நிலம்...
தமிழன் வியர்வையில்
தழைத்ததை விளக்கும்
தேயிலை; ஆனால் அதற்கு
வாயிலை!
**
அண்மையில்
அகதிகளாய்ச் சிலர்...
கலம் ஏறி வந்தனர்
கண்ணீர்க் கடலோடு;
தரை காணா போயினர்
தண்ணீர்க் கடலோடு!
**
பயணித்தபடகு...
கவிழ்ந்து
கடலெங்கும் சவம்;
அது சவமல்ல; அந்த
சித்தார்த்தன் தவம்!
**நன்றி:கவிஞர் வாலி ,குமுதம்.

0 comments: