Friday, June 1, 2007

வலி..

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!
*
பிறந்த குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!
*
கடல் கடந்து
பார்க்க
வந்திருக்கின்றன
சோறு வைத்த
காக்கைகள்!
*
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!
*
ஆழிப் பேரலைகளும்
எங்கள்
பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப் போய்
கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்!
*
இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீர்கள்!
நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம்!
*
வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்!

இல்லறம்

எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்
*
அங்கே
'அவனா?'
என்று கேட்டு
அடித்தார்கள்
வலிக்கவில்லை

இங்கே
"திருடனா?"
என்று கேட்டு
அடிக்கிறார்கள்
வலிக்கிறது.
**
அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்!
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை
*
பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறீர்கள்!
உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்
*
தமிழில்தான்
விசாரித்தார்கள்
தமிழர்களாய்
இல்லை
*
மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை!
"தமிழர்சதுக்கம்."
*
அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்!

இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்
*
தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்!

தப்பித்தவர்கள்
'ஏன்?'களுக்கு
இரையானோம்
*
எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது!

உங்களால்
இரங்கி
வந்து
உரையாடமுடியவில்லை!
*
இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.
*
நேற்று வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்!
*
முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது...
யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!’
**நன்றி:அறிவுமதி

0 comments: