Friday, June 1, 2007

குழந்தைகள் நிறைந்த வீடு..

கருப்பு வெள்ளை புகைப்படம்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்.
*

அடகு வைத்த
கடிகாரத்தை
அடிக்கடி

நினைவுப்படுத்தும்..
மணிக்கட்டில் தழும்பு

*
இறந்த பாட்டியின்
மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.

*
தோட்டத்தையும்

பின்பொரு பெண்ணையும்
சேர்த்து ஜாபகப்படுத்துகிறது
நூலகப் புத்தகத்தில்

உலர்ந்த செம்பருத்தி.
*
யாரும் தீண்டாமல்
நகரும் தீப்பெட்டி
உள்ளே பொன்வண்டு.
*
எழுந்து நடந்தான் புத்தன்
போதிமரத்தடியிலும்
எறும்புகள் கடிக்கின்றன.
*

இன்று வேண்டாம் நிலா
நாளை வா
ஊட்டுவதற்குச் சோறில்லை.
*
யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்.
*
எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை.
*

உடம்பெல்லாம்
வளையல்கள்
தென்னை மரம்.
*

சிக்னலுக்குக் காத்திருக்கும்
கூட்ஸ் ரயிலுக்குக் கீழே
பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன.

*
நாள் தோறும்
இரண்டு முறை
சரியான நேரம் காட்டும்
ஓடாத கடிகாரம்.
*

கிராமத்து நாவிதன் முன்
வரிசையாய் பங்காளிகள்
தாத்தாவுக்குக் காரியம்
**நன்றி: நா. முத்துக்குமார்

அறிவுமதி கவிதைகள..

ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள்
நாம்!
அன்பே!அன்பே!
*
தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?
*
மறப்பதென்றால்
அது முடியவில்லை.
நினைப்பதென்றால்
மனம் சலிப்பதில்லை.
*
நல்ல மழை
பூக்காரி வீடெல்லாம்
(கூடை நிறையப்)
பூவாசம்
*
பாதை நெடுக
'அம்மா தாயே!'
எப்படி சாத்தியம்
ஐஸ்கிரீம் தின்றுச்
சிரித்துப் பேசி... ஓ...
*
ஊருக்குத் திரும்ப
ஒரு வாரம் ஆகும்!
அய்யோ!
நின்று கொண்டேயிருப்பாள்
என் குழந்தை பொம்மை!
*
கூலி விவசாயி!
பசி!
எலி வளைக்குள் நெல்!
*
பழித்துக் காட்டாதே குயிலே!
அந்தக் குழந்தையின் தாய்
உயிரோடில்லை
*
மலரும் பூக்களிலிருந்து
"அம்மா!"
"அம்மா!"..
**
மனித உரிமை பேசி
மரண எதிர்ப்புபேசி
நீளும் பிச்சைக் கைகளில்
உதிரும்
வெள்ளைக்காசு
நக்க
தமிழின் அடம்புக்குள்
நுழையும்
சூழ்ச்சி பொறுத்து
அடையாளத்தேடலுக்கு
அலையும்
சில
மிக நல்ல
மிக மிக மிக
நல்ல நல்ல
முற்போக்குகளும்!
**
முருகனைக்

குப்புறக்கிடத்தி
முதுகில்
வேல் செருகி
விளையாடும்
விநாயக
விளையாட்டின்
வேதனை
உணராமல்
எருக்கம் பூ மாலை
கிளாக்காய்
பிரப்பம் பழம்
காகிதக் குடை
விற்கும்
எம்
நந்தனின் சொந்தங்களாய்
அட்லாண்டிக்கின்
வெளியே
புத்தகக்கடைகள்!

அவாள்களின் விற்பனை
அம்பலத்தாடுவான்
போலே
உள்ளே
உள்ளே
மேலே
மேலே
**
பொட்டலச்சோற்றை
பொறுப்பாய் வாங்கி
இலைச்சோற்றை
ஏகடியம்
செய்யும்
வெட்கங் கெட்ட
தன்நிலை
உணரா
தாழ்வு அறிவுகள்
**
புலம்பெயர்ந்து
பிழைக்கப்
பழகி
துரோகக் காசுகள்
உலுக்கப்பழகி
தங்கை மச்சான்
உறவுகளாக
அழைத்துவந்து
அகதிகள் அல்லல்
அறவே மறந்து
உயர்தர மதுவாய்
தாமிரபரணியின்
குருதியை
ஈழக் கடலின்
குருதியைக்
கலந்து குடித்து
கலந்து குடித்து
தொட்டுக்கொள்ள
எடுக்கும்
சேரனின்
மீன் துண்டுகளில்
இருக்கலாம்
கடலில் சிதறிய
எம்கறும்புலித்
தங்கைகள்

தம்பிகளின்
சதைத் துணுக்குகளும்!
**
நன்றி:அறிவுமதி

சுவடுகள்..

அந்த இரயிலில்
நான் ஏறும் போதெல்லாம்
பார்க்கிறேன்
இறங்கிப்போகும் அவளை!
*
அச்சமில்லை.. அச்சமில்லை
ஞாபகத்தில்.. தேனருவி
உச்சரிக்க முடியாத உன் முகம்!
*
பந்தலடி அம்மியில்
மல்லிகைப் பூக்கள்
இன்னும் வராத அவள்!
*
காலதாமதமாகவே வரட்டும்
காத்திருப்பாள்.. உண்மைதான்
தண்டவாளத்தில் நத்தை.
*
கோபத்தை வாழ்த்தினேன்
மூன்று நாட்களாய்ப் பார்க்காத
உன் சோர்ந்த முகம்.
*
மனம் நிறைய ஞாபகங்கள்
பிறகு ஜன்னல் திறப்பேன்
போய் வா..
வானவில்!
*
உன்னிடமிருந்து கடிதம் வருமா!
என் காலண்டர் முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்!
*
தனித்த அறையில் நான்.
நீயோ திமிர்பிடித்த
வாலிபமும் வெளிச்சமாய்..
சில கவிதைகள்!
*
கண்ணாடியைச் கொத்தும்
சந்தேகச் சிட்டு.
அவளுக்கும் சில அலகுகள்!
*
எங்கள் காதலின்
எலும்புகள் மட்டும்
அவள் போன தண்டவாளங்கள்..
**நன்றி:அறிவுமதி

அணுத்திமிர் அடக்கு..

கொடிமரம்
ஒடி!

சிறைகள்
இடி!

இராணுவம்
அழி!

அரசுகள் அற்ற
அரசினைச் செய்!

கனவைச்
சுருட்டு!

வானத்தைத்
தின்னு!

கிரகங்களைக்

கொறி!

காற்றைக்
குடி!


புனிதம்
விரட்டு!

தீது
செயற்கை!

எவரையும்
வியக்காதே!
மதி!! மதி!! மதி!!

காத்திருக்காதே!

கற்பு
உடலுக்கு!

காதல்
உயிருக்கு!

காதலி..
*
அர்த்தம்
இல்லை
சொல்லில்!

அர்த்தம்

இல்லை
யாப்பில்!

அர்த்தம்
இல்லை
இல்லை
கவிதையிலும்!

கண்டு
தெளி
கொச்சையுள்!

**நன்றி:அறிவுமதி

கடைசி மழைத்துளி..

அகதி முகாம்
மழையில் வருகிறது
ண் மணம்.
*
அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.
*
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.
*
விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.
*
தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.
*
இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.
*
விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.
*
வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.
*
எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.
*
தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.
*
பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.
*
மரக்கிளையில் குழந்தை

வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.
*
வாழ்க்கை என்னடா வாழ்க்கை

கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!
*
எவன் நிலம்!

எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!
*
நந்தனைக் கொன்றதே சரி

குலதெய்வம் மறந்த
குற்றவாளி.
*
நொறுக்குவான் பண்ணையாரை

எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.
*
பிணப் பரிசோதனை

அய்யர் குடலிலும்
மலம்.
*
தேவர் படித்துறை

பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!
*
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
*
ஊருக்கு ஊர் வட்டிக்கடை

பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.
*
குருட்டுப் பாடகன்

தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.
*
அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.
*
ஒரே தலையணை

வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.
*
இரண்டு அடி கொடுத்தால்தான்

திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.
*
எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.
*
கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.
*
ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்
*
கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு
*
'இந்தியா டுடே'யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.
*
இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்
*
உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.

ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது
**நன்றி:அறிவுமதி

வலி..

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!
*
பிறந்த குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!
*
கடல் கடந்து
பார்க்க
வந்திருக்கின்றன
சோறு வைத்த
காக்கைகள்!
*
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!
*
ஆழிப் பேரலைகளும்
எங்கள்
பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப் போய்
கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்!
*
இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீர்கள்!
நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம்!
*
வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்!

இல்லறம்

எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்
*
அங்கே
'அவனா?'
என்று கேட்டு
அடித்தார்கள்
வலிக்கவில்லை

இங்கே
"திருடனா?"
என்று கேட்டு
அடிக்கிறார்கள்
வலிக்கிறது.
**
அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்!
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை
*
பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறீர்கள்!
உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்
*
தமிழில்தான்
விசாரித்தார்கள்
தமிழர்களாய்
இல்லை
*
மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை!
"தமிழர்சதுக்கம்."
*
அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்!

இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்
*
தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்!

தப்பித்தவர்கள்
'ஏன்?'களுக்கு
இரையானோம்
*
எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது!

உங்களால்
இரங்கி
வந்து
உரையாடமுடியவில்லை!
*
இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.
*
நேற்று வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்!
*
முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது...
யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!’
**நன்றி:அறிவுமதி