Wednesday, March 28, 2007

நகுலன் கவிதைகள்...

‘‘நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால், என்னால் வர முடியாது!’’
*
எந்தப் புத்தகத்தைப் படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
*
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல் போகிறோம்!
*
என்னைப் பார்க்க
வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
*
மிகவும்
நாணயமான மனிதர்..
நாணயம் என்றால்
அவருக்கு உயிர்!
*
வேளைக்குத் தகுந்த வேஷம்
ஆளுக்கேற்ற அபிநயம்
இதுதான் வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு யாருமில்லை..
நான் கூட!
*
யாருமில்லாத
பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!
*
நீயிருக்க
நானிருக்க
நேற்று இன்று நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!
*
உன்னையன்றி
உனக்கு வேறு
யாருண்டு?
*
ஆர்ப்பரிக்கும்
கடல்
அதன் அடித்தளம்
மௌனம்;
மகா மௌனம்!
*
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை
ஞானம்!
*
வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’ என்றான்.
‘‘உன்னையும் என்னையும்
தவிர வேறு
எல்லாம் தெரியும்’’
என்றேன்!
*

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை.
*
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில் வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!


நன்றி : விகடன்


0 comments: