Tuesday, April 17, 2007

சிறுகவிதைக் களஞ்சியம்..

பழநிபாரதி
என்னைத் தவிர
யாரிடமும் பேசாதே.
உன் இதழ்களில்
நனைந்து
வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகி
விடுகின்றன.
**
இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்
பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்
என்பது.
**
உன் காலடியில்
ஊரும் எறும்பை
தயவுசெய்து
நசுக்கிவிடாதே..
அது இழுத்துவரும் இரை
நம் காதலின்
பெயரெழுதிய
அரிசியாக இருக்கலாம்.
**
நீ ஒருமுறைதான்
பார்த்துவிட்டுப் போனாய்
என் வீட்டு ஆளுயரக்
கண்ணாடி
உன் நிழற்படமாகிவிட்டது.
**
இரவும் இரவும்
சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட
இரகசியமான இடம்
உன் இதயம்.
அதனால்தான்
அங்கே
என்னை நீ
என்ன செய்கிறாய் என்றே
தெரியவில்லை.
**
நீ பருவமகள்
உண்மைதான்.
குளித்து முடித்த உன்
கூந்தலில்
நீர் சொட்டும் போது
மழைக்காலம்.
சீவும்போது
இலையுதிர்காலம்.
நீ பூச்சூடும்போது
வசந்தகாலம்.
அதை அள்ளி
நான் போர்த்திக்
கொள்ளும்போது
குளிர்காலம்.
**
கொடுக்கும் முத்தத்தை
விட
லேசானது
வாங்கும் முத்தம்
ஆனால்...
லேசாக
வாங்கிவிட முடியாது.
**
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப்
பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்..
நீ நடந்து வருகிறாயா??
ரயிலில் வருகிறாயா?
**
உடைந்த வளையல்
துண்டுகளையாவது
கொடுத்துவிட்டுப்போ.
கலைடாஸ்கோப்பில்
உன்னைப்
பார்த்துக் கொண்டிருப்பேன்
**
தேவதைகள்
பூமிக்கு வருவதில்லை
என்பதெல்லாம்
காதலிக்காதவர்கள்
சொல்லி வைத்த
பொய்கள்..
**
பா.விஜய்
ரோஸ் ஜஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்!
நிற மாற்ற விதி
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல்!
**
எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என்
மனசும்.

கம்பெனி சைக்கிளில்
போகும் உனை
வாடகை சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்
செயினும் என் தைரியமும்.

பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு
வரக்கூடாதா?
**
கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!
**
சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி
எழுதத் தானோ?
**
கபிலன்
யாரோ நம் பெயரை
சுவரில் கிறுக்கியிருந்ததை
ப்படிக்கும் பொழுது
அச்சமாக இருந்தது.
நேற்று அதன்மீது
"காதல்"
திரைப்பட போஸ்டரை
ஒட்டியிருந்ததைப் பார்க்க
மகிழ்வாக இருந்தது.
**
பறக்கத் தெரியும்
திசை தெரியாது..
காதல் ஓர்
இலவம் பஞ்சு.
**

0 comments: