Wednesday, April 18, 2007

நம்பிக்கை ஊன்றி நட..

ஏ!
எந்திர மனிதா!
இன்று முதல்

சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி!

எரிமலைக்
குழம்பா?
இரும்பு காய்ச்சு!

பூகம்பமா?

பூச்செடிகளை மாற்றி நடு!

தாடி சோகம்

இரண்டையும்
ஒரே கத்தியால்
மழித்து விடு!
***
பத்திரிகை முதல் பக்கம்

அத்தனையும் ரத்தமா?
தலைப்புச் செய்தியில்

தேசமே காணோமா?
தேநீர் குடி

ஓசோன் கூரையில்
ஓட்டையா?
குடைபிடி


எந்தக் காலத்தில்
பூமி
தலைசுற்றாமல்
சுற்றியது?

பல் முளைக்கையில்
ஈறு வலிக்கும்
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்
வலியெடுத்தால் வழிபிறக்கும்
வழிபிறந்தும் வலியிருக்கும்
***
பூமி பொதுச் சொத்து
உன் பங்கு தேடி
உடனே எடு
ஒவ்வொரு மேகத்திலும்
உன் துளி உண்டு
ஒவ்வொரு விடியலிலும்
உன் கிரணம் உண்டு
வானம் போலவே
வாழ்க்கையும் முடிவதில்லை
**
முதற்காதல்
முற்றும் தோல்வியா?
இன்னொரு காதலி
இல்லையா என்ன?
பூமியை நோக்கி
அழிவுக் கோளா?
இன்னொரு கிரகம்
இல்லையா என்ன?
**
சிரி
நம்பிக்கை ஊன்றி
நட
ஆனால் மனிதா
அவசரப்படாதே
மண்ணின் பொறுமைதான்
மலை
கரியின் பொறுமைதான்
வைரம்
தாயின் பொறுமைதான்
நீ
நான்காண்டுப் பொறுமைதானே
பிப்ரவரியின்
ஒருநாள் உயர்வு?
***

எந்திர மனிதா
இன்று முதல்
சிரிக்கப் பழகு
இந்த பூமி
சிரிப்பவர் சொர்க்கம்
அழுபவர் கல்லறை
உன் உதடு
கல்லறையா? சொர்க்கமா?
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

0 comments: