Wednesday, April 18, 2007

இது போதும் எனக்கு..

அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்
உன்பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இதுபோதும் எனக்கு
**
தண்ணீர் போலொரு வெந்நீர்

சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ
இதுபோதும் எனக்கு
**
வெளியே மழை

வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இதுபோதும் எனக்கு
**
குளத்தங்கரை

குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க
உன் முந்தானை
இதுபோதும் எனக்கு
**
நிலா ஒழுகும் இரவு

திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இதுபோதும் எனக்கு
**
மரங்கள் நடுங்கும் மார்கழி

ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்
இதுபோதும் எனக்கு
**
நிலாத் தட்டு

நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ
இதுபோதும் எனக்கு
***
தபோவனக் குடில்

தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும்
ஓரிரு பூ
இதுபோதும் எனக்கு
**
பூப்போன்ற சோறு

பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்
இதுபோதும் எனக்கு
**
மூங்கில் தோட்டம்

மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மெளனம்
நீ பாடும் கீதம்
இதுபோதும் எனக்கு
**
அதிராத சிரிப்பு

அனிச்சப்பேச்சு
உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதை
மேல்
விழிந்து வழியும்
உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்
இருந்தால் போதும்

எதுவேண்டும் எனக்கு?
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

0 comments: