Friday, April 13, 2007

எனது கறுப்புப் பெட்டி!

ரயில் பயணங்களின் போது...
வீட்டு ஜன்னல்களின் வழியே
கையசைக்கும் குழந்தைகளுக்கு
பதில் கையசைக்கும்
கைகள் எனக்கில்லை
**
திட்டமிட்டு யாரையும்
ஏமாற்றுகிற துணிவு
என்னகில்லையென்றாலும்
ஏதாவது உணவகத்திலோ
மருந்தகத்திலோ
கொடுத்த பணத்தை
விட அதிகமாக தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில்
நானும் ஒருவனே..
**
எப்படியேனும்
எல்லோரிடமிருந்தும் தப்பித்து
வீடு வந்து
கண்மூடினால்
என்னிடம்
மாட்டிக் கொள்கிறேன்..
**
நாள் முழுவதும்
கூந்தலிலிருந்த பூவை
எந்தச் சலனமுமின்றி
எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச்
சூடிக் கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்..
**
அவ்வளவு தொலைவிலிருந்து
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன்
உயிர் வாழமுடியாது
என்பதை
எப்படி நம்புவது?
**
'அ'-வுக்கு முந்தி
எழுத்துக்கள் இல்லையெனினும்
'அ'- எழுதப் பழகிய
என் கிறுக்கல்களெல்லாம்
'அ'-வுக்கு முந்திய எழுத்துக்களே!
**
நான்
யாரைப் பார்க்கப் போனாலும்
அவர்
தனிமையில்
இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு..
தனிமை
கலைக்கப்படுகிறபோது
ஏற்படும்
இழப்புகளை
நான் அறிவேன்
**நன்றி..தபூ சங்கர்

0 comments: